செய்யூர்: தமிழகத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்யும் சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் போது பிரபல இசையமைப்பாளர் திரு.கங்கை அமரன், நடிகர் தலைவாசல் விஜய், ஏ.வி.ஏ குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு.ஏ.வி. அனூப் ஆகியோருக்கு வெள்ளி விழா விருது வழங்கப்படுகிறது. . ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடைபெறும் விழாவில் ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி விருதுகளை வழங்குகிறார்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் அவர்கள் மௌனகீதங்கள், மற்றும் வாழ்வே மாயம் (1983) போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏஞ்சோடி மஞ்சகுருவி, ஒரு கிளி உருகுது, பூஜைக்கேற்ற பூவிது, போன்ற பல ஹிட் பாடல்களுக்கு அமரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பைத் தவிர, தெம்மாங்கு பாட்டுக்காரன், படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் கோழிக் கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், அண்ணனுக்கு ஜே, கோவில் காளை, கரகாட்டக்காரன் உள்ளிட்ட சுமார் பத்தொன்பது படங்களை இயக்கியுள்ளார். நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என பல்வேறு துறைகளில் பிரபலமானவர் கங்கை அமரன்.
பிரபல நடிகரும், பின்னணி குரல் கலைஞருமான ஏ. ஆர். விஜயகுமார் என்ற தலைவாசல் விஜய் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் பல குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர். கடந்த முப்பது வருடங்களாக நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், துணை நடிகராகவும் இருநூற்று அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘யுகபுருஷன்’ என்ற படத்தில் ஸ்ரீ நாராயணகுருவாக அவர் நடித்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இவர் ஏற்கனவே பல திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். திரைப்படத் துறை மட்டுமின்றி, தமிழ் , மலையாளத் தொலைக்காட்சித் துறையிலும் இவர் பெயர் பெற்றவராகத் திகழ்கின்றார். வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஜனவரி 7 ஆம் தேதி ‘மக்கள் நலம்’ என்ற பெயரில் நடக்கும் இலவச சித்த மருத்துவ முகாமை துவக்கி வைக்க உள்ளார்.
இந்திய யூரேஷியன் டிரேட் கவுன்சிலின் தலைவர், டாக்டர் ஏ.வி.அனூப், கடந்த 41 ஆண்டுகளாக ஆயுர்வேதம், மருத்துவம் மற்றும் உணவுத் துறைகளில் சிறந்து விளங்கிவருகின்றார். திரு.ஏ.ஜி.வாசவன் மற்றும் திருமதி.லில்லி பாய் ஆகியோருக்குப் பிறந்த இவர், திருவனந்தபுரத்திலுள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். மெடிமிக்ஸ் என்பது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கையால் செய்யப்பட்ட சோப்புகளுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரு தயாரிப்பு ஆகும். ஒரே ஒரு தயாரிப்பின் மூலம் உலகம் அறியும் தொழிலதிபராக மாறியவர் அனூப் அவர்கள் . தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். A.V.A அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், இந்திய ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர், டீம் ஆர்ட்ஸ் தலைவர், இந்திய உலகளாவிய வர்த்தகச் சங்கத்தின் தலைவர், சென்னை கேரள சமாஜத்தின் புரவலர் போன்ற பல பதவிகளில் சமூகப் பணி மற்றும் திரைப்படத் துறையிலும் அவரது செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.